சென்னை: காசிமேட்டில் மீன்களை வாங்க அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர். இதனால், மீன் விற்பனை நேற்று களைகட்டியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக மீன்வாங்க கூட்டம் அலை மோதும். இந்நிலையில், குடியரசு தினம், தைப்பூசம் என கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், நேற்று காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும்மேற்பட்ட படகுகள் கரை திரும் பின. மீனவர்களுக்கு கடலில் அதிகளவு மீன்கள் கிடைத்ததால், மீன் விற்பனை களைகட்டியது.
காசிமேடு சந்தையில் மீன் விற்பனைக்காக ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங்கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது.
இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறும்போது, ‘விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன்களை வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. வஞ்சிரம் கிலோ ரூ. 800 முதல் ரூ.1000-ம், வவ்வால் வெள்ளை நிறம் ரூ.600-ம், சிறிய வவ்வால் ரூ.500-ம், கொடுவா ரூ.600-ம், சங்கரா ரூ.500-ம், பாறை ரூ.500-ம், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது தலா ரூ.300-ம், நவரை, கானாங்கத்தை, நெத்திலி தலா ரூ.200-க்கும் விற்பனையானது என்றனர்.